Wednesday, December 15, 2010

மரணம்

எல்லையில்லாமல் விரிந்து செல்லும்
இருளின் கைகளுக்குள்
பிடிபடாமல்
மிதந்து கொண்டே இருக்கிறேன்

ஒளி ஒளியாய்
நட்சத்திரங்கள் சிதறிக் கிடக்கின்றன

கடற்கரை மணலில்
சிப்பியைத் தேடும்
சிறுவனைப் போல்
இருளின் எல்லா திசைகளிலும்
நட்சத்திரங்களைப் பொறுக்குகிறேன்

நட்சத்திரங்களை
என் கைகளில் மூடியவுடன்
ஒளியை இழந்து விடுகின்றன

மறுபடியும்
அவற்றை இருளில் வீசி எரிகிறேன்
நட்சத்திரங்கள் ஒளிர்கின்றன

இந்த
பிரபஞ்ச விளையாட்டில்
தொலைத்து விடுகிறேன்
என் அறிவை

இதை
விளையாடிக் கொண்டே இருக்கிறேன்
இருளில் நான் தொலையும் வரை

பிறகு புரிகிறது
நட்சத்திரங்கள் எனக்கு என்பதும்
இருளுக்கு நான் என்பதும்

No comments: