Thursday, August 20, 2009

இருளின் ஆளுமையில்

ஒளியைத் தின்ற இருள் ஒன்று
சுவர்கள் இல்லாத
வெளியில் எல்லையற்று
நிரம்பி கிடக்கிறது

அரவங்களின் ஓட்டமும்
கண்கள் மினுக்கும் நாய்களின்
சுவாச சத்தமும் அன்றி
மவுனம் மட்டுமே
ஆக்கிரமிப்பு செய்கிறது அவ்வெளியில்


அங்கு
கைகளை வீசித் தேடுகிறேன்
இதுவரை நான் பார்த்திராத
ஓவியம் ஒன்றை
விரல்கள் இடுக்கில்
கிழிந்து செல்கிறது காற்று

எவனோ காதில் சொல்லிப் போனான்
ஓவியத்தில் நிர்வாணமாய்
பெண் ஒருத்தி இருப்பாள் என்று
காமத்தின் போதையில் தேடுகிறேன்
முலைகளின் சந்துகளில்
வியர்வையின் வாசத்தை
சுவாசம் பிடிக்க

காற்றின் வீச்சம் விரல்களை வீழ்த்துகிறது
இருந்தும் முயன்று கிழிக்கிறேன் காற்றை
ஆனால் எனக்குத் தெரியவில்லை
நான் குருடன் என்று