Tuesday, April 17, 2012

காற்றில் மிதக்கும் சிறகு

காற்றில்
மிதந்து கொண்டிருக்கிறது சிறகொன்று

இக்காட்சியின்
அழகை கவிதையாய் பதிவு செய்திட
கவிஞன் ஒருவன் முயல்கிறான்

தலைப்பிடுகிறான்
காற்றில் மிதக்கும் சிறகென்று
எழுதி எழுதி கிழித்து எறிகிறான்

பெருமுயற்சியிலும்
அவனால் அந்த காட்சியை
அழகாக பதிவு செய்ய முடியவில்லை

வார்த்தைகளில்
அழகியல் பதிவு செய்யப்படாமல்
துன்பியலே பதிவு செய்யப்படுகிறது


பெருவெளியில்
சிறகின் தனிமையும்
பற்றிக் கொள்ள ஏதுமில்லாமல்
பதட்டமாய் காற்றின் போக்கில் அலைவதுமென
ஒரு பொருளின் துயரமே
அவனது வார்த்தைகளாய் வடிவம் பெறுகின்றன


இப்பொழுது
கவிதையை திருத்தி தலைப்பிடுகிறான்
காற்றில் அலையும் சிறகென்று

பிறகு
கவிதையை கிழித்து எறிந்து விட்டு
அவனது அறையின் இருண்ட மூலையில்
ஒளிந்து கொள்கிறான் தனிமையில்