Sunday, October 7, 2012

எனக்கு தெரிந்த மொழிகளின் வார்த்தைகளையெல்லாம் நீ கவர்ந்து கொண்டதன் மூலம் என்னுடைய அறிவை நீ திருடிக் கொண்டதாய் நினைக்கிறாய்.இனி உன்னைப் பற்றி நீ எழுதச் சொல்வதன் மூலம் என்னை அறிவற்றவனாய் நிரூபிக்க விரும்புகிறாய்.மனிதனின் அறிவு புலன்களால் அமைந்திருப்பதால்...உன் தோலின் நிறத்தை,உன் வியர்வை வாசத்தை,எச்சிலின் சுவையை,ஸ்பரிசத்தின் வருடலை,தொடைகளின் வெப்பத்தை,புணர்வின் ஆழத்தை நான் மறக்கும் வரையில் என்னை உன்னால் அறிவற்றவனாய் நிரூபிக்கவே முடியப்போவதில்லை

Sunday, May 20, 2012

இருப்பு....

எப்பொழுதும் பண்டிகை விடுமுறைகளில் சொந்த ஊருக்கு வருவது என்னுடைய வழக்கம் தான்.இரைச்சலான நகரத்தின் பரபரப்பான வாழ்க்கையில் இருந்து இந்த பயணம் என்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள உதவும்.நான் வளர்ந்த தெருக்களில் நடப்பது,படித்த பையன்களுடன் கூடி அவர்களுடைய உத்யோக வாழ்க்கை விசாரனைகளுடன் பால்ய நினைவுகளை அசை போட்டபடி அமைதியான இந்த ஊரின் காற்றை சுவாசிப்பதில் வார்த்தைகளால் விளக்க முடியாத மகிழ்ச்சி ஏற்படும்.அதுவும் பண்டிகை காலங்களில் முன் பதிவு செய்திடாமல் இந்த ஊருக்கு வரும் கஷ்டம் இருக்கிறதே.சேர்ந்தார் போல் இரண்டு நாட்களுக்கு மேல் விடுமுறையாக இருந்து விட்டால் போதும்.பேருந்தில் இடம் கிடைப்பதற்கு கர்ணம் போட வேண்டியிருக்கும்.இப்படி இந்த ஊருக்கு வருவதென்பது மிக சுவாரசியமான விஷயம்.
ஆனால் இன்று காலை ஊருக்கு வந்ததிலிருந்தே எதனாலோ என் மனம் தவித்துக் கொண்டிருக்கிறது.ஏதோவொரு துர் நிகழ்ச்சியின் வரவை எதிர்பார்த்து காத்திருந்தது போல் அச்சமும்,குழப்பமும் கலந்த நிலையில் புத்தி மெய்யுலகை விட்டு விலகி,ஒரு இயந்திரம் போல சுய நினைவற்று கற்பனையான உலகில் தன்னிச்சையாக இயங்கி கொண்டிருக்கிறேன்.
எங்கள் வீட்டில் ஒரு நிலைக்கண்ணாடி உள்ளது.அது ஒரு ஆளுயர கண்ணாடி.அதன் முன்னால் சென்று நின்றவுடன் அதில் தெரியும் பிம்பமே மொத்த உலகமுமாகி விடும்.அந்த பிம்பதையே கண் கொட்டாமல் சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருக்கும் போது பார்வையாளனும் பார்க்கப்படும் பொருளும் ஒன்றாக கலந்து,சர்வமும் ஒன்றாகி,எல்லைக் கோடுகள் கரைந்து கால வெளியில் சிந்தனையும் உடலும் மிதக்க ஆரம்பிக்கும்.எல்லா செயல்பாடுகளும் சூன்யமாகி மனம் அமைதியாகி விடும்.இந்த சுவாரஸ்யமான அனுபவத்தை தியானத்தின் மூலமாக அடையலாம் என்ற போதிலும் எனக்கு ஒரு ஆளுயர கண்ணாடியின் முன் நின்று என்னைப் பார்ப்பதே ஒரு வகை தியானம் என்று தோன்றுகிறது.இன்று எனது மனம் இருக்கும் நிலையில் இந்த தியானம் அவசியமாகப் பட்டதால் அந்த ஆளுயர கண்ணடியின் முன் நிற்கிறேன்.
எனது கண்கள் மிகவும் அழகாக இருக்கின்றன.ஆனால் கன்னத்தில்தான் சற்று சதை கூடுதலாக,மூக்கு சற்று தட்டையாக இருக்கிறது.முன் தலையில் முடியின் அடர்த்தி குறைவாக இருக்கிறது.உடலிலும் கை கால்கள் அவ்வளவு வசீகரமாக இல்லை.எனது கால்களுக்கு கீழிருக்கும் தரையின் சில்லிப்பை உணர்கிறேன்.அந்த தரைக்கு கீழிருக்கும் பூமியின் நில அடுக்குகளில் இப்போது என்ன நடந்து கொண்டிருக்கும் என தோன்றுகிறது.புத்தி மெதுவாக என் அடல் அமைப்பைத் தாண்டி என்னைத் தாங்கிக் கொண்டிருக்கும் இந்த நில அமைப்பை விசாரனை செய்ய ஆரம்பிக்கிறது.அடுக்கின் கீழ் அடுக்காக சென்று கொண்டேயிருக்கும் இந்த பூமியின் அச்சு இப்போது நான் நின்று கொண்டிருக்கும் தரையிலிருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறதோ?இந்த அச்சோ அல்லது இந்த அடுக்குகளில் ஏதேனும் ஒன்றோ தன்னுடைய வழக்கமான செயல்பாடுகளிலிருந்து விலகினால் நான் இப்போது நிற்கும் இந்த தரையின் ஸ்திரத்தனமையும் இந்த தரையும் இல்லாமல் போகும்.அந்த செயல் மீறலின் பாதிப்புகள் அவ்வளவு தூரம் பயணம் செய்து இந்த தரையை எப்போது வேண்டுமானாலும் வந்தடையலாம்.என்னுடைய மகனோ,பேரனோ இதே தரையில் நிற்கும் போதெனில்,என்னுடைய வம்சத்தை அழிப்பதற்கான வேலை இப்போது இந்த தரைக்கு கீழே நடந்து கொண்டிருக்கலாம்.
அப்போது மின்னல் போல ஒரு சிந்தனை வெட்டுகிறது.இவ்வாறு விமர்சனம் செய்து கொண்டிருக்கும் சிந்தனை எங்கிருந்து கிளம்புகிறது.அதன் வடிவம் எவ்வாறிருக்கும்?என் சிந்தனை மெதுவாக புற உலகை விட்டு அக உலகிற்குள் செல்ல ஆரம்பிக்கிறது.என்னுடைய சிந்தனை என்னை விட்டு தொலைந்து போய் விட்டால்,அப்போது நான் என்னவாக ஆகிறேன்?இந்த உடலில் உள்ள விரலை வெட்டினால் வலிக்காமல்,நிர்வாணமாக நிற்கும் போதும் பதறாமல் உணர்வுகளை வென்று கடவுளாக மாறிவிடலாம்.
நான் என்பது யார்?நான் என்னை எவ்வாறு அடையாளப்படுத்திக் கொள்கிறேன்?ஒரு பெயரை சொல்லி அழைக்கும்போது அது என்னுடைய பெயர்தான் என்றெனக்கு எப்படிப் புரிகிறது?இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொரு மனிதருக்கும்,பொருளுக்கும் ஒரு பெயர் இருக்கிறது.அந்த பெயர்கள் தொலைந்து போனால் மனிதர்களின்,பொருட்களின் இருப்பு எவ்வாறு நிறுவப்படும்?பெயர்கள் தான் இருப்பா?நான் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த பொருள் ஏன் கண்ணாடி என்றழைக்கப்படுகிறது?நம்முடைய சிந்தனையில் கண்ணாடி என்பது ஒரு பிம்பத்தை காட்டும் பொருள் என்று எவ்வாறு நிறுவப்பட்டது?பொருட்களும் அதன் பண்புகளும் அதன் இருப்பும் இந்த உலகத்தில் எவ்வாரு சாத்தியப்படுகிறது?நம்முடைய படிப்பினாலா அல்லது நம்முடைய முன்னோர்களிடமிருந்தா?பெயர்களற்ற உலகம் எப்படி இருக்கும்?அங்கே இருத்தல் என்பது என்ன?.நான் எதற்காக இங்கே இருக்கிறேன்?நான் இங்கு இல்லாமல் போனால் இந்த பிரபஞ்சத்தின் செயல்பாடுகளில் என்ன வித மாற்றம் ஏற்படும்?கடலில் இருந்து ஒரு துளி இல்லாமல் போனால் என்ன விதமான மாற்றத்தை அந்த கடல் அடைகிறது?ஒரு துளி அதில் சேரும் போதும் என்ன வித மாற்றத்தை அந்த கடல் அடைகிறது?ஒரு மாற்றமும் இல்லையெனில் ஒரு துளியின் பங்கு என்ன?கடல் என்பது என்ன?அந்த துளி சேரும் போதும் தொலையும் போதும் கடல் அப்படியே இருக்கிறது.அந்த துளிக்கு முன்னரே அந்த கடல் அங்கே இருந்திருக்கிறது.அந்த துளிக்குப் பின்னரும் அந்த கடல் அங்கே இருக்கிறது.ஆக எந்த துளியில் கடல் உருவானது?எந்த துளியில் அது இல்லாமல் போகிறது?அதனில் ஒரு துளியாக இருந்து கொண்டு அதன் கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் அறிந்து கொள்ள முற்படுவதின் சாத்தியம்,பேராற்றல் பொங்கும் பிரபஞ்சத்தின் ஒரு துளியாக இருந்து கொண்டு பிரபஞ்சத்தின் கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் அறிந்து கொள்ள முற்படும் மனித சிந்தனையை ஒத்திருக்கிறது.நான் இருந்தாலும் இல்லாமல் போனாலும் பிரபஞ்சம் இருக்கும்.அப்போது நான் என்பதன் அர்த்தம் என்ன?இருத்தலின் பொருள் என்ன?
அப்பொழுது “அம்மா அம்மா” என்ற ஒரு ஈனமான குரல் என் சிந்தனைகளை கலைத்தது. நான் அது என்னவென்று என் அம்மாவிடம் கேட்டவுடன்,.மணி பண்ணிரண்டு ஆகி விட்டதென்றும், என் வீட்டுக்கு அருகில் இருக்கும் பாஸ்கரன் சாப்பாட்டிற்கு கத்துகிறான் என்றும் அம்மா கூறினாள்.அவனுக்கு கை கால்கள் விளங்காமல் போய் விட்ட விஷயத்தையும்,அவன் மணைவி இறந்து போய் அவனுடைய மகன்கள் அவனை விட்டு விட, அவனுடைய அம்மா தான் அவனுக்கு இப்போது சமைத்து போடுகிறாள் என்றும் கூறினாள்.என் வீட்டின் மொட்டை மாடியில் இருந்து பார்த்தால் அவனுடைய வீட்டின் வாயில் தெரியும்.அடிக்கின்ற வெயிலில் காய்ந்து கொண்டிருந்த மொட்டை மாடியில் கால்களை வைத்த உடன் தரையில் ஏறியிருந்த சூட்டினால் பாதங்களில் பொடி ஒட்டியது.அங்கிருந்த ஒரு துணியை விரித்துப் போட்டு அதன் மேல் நின்று கொண்டேன்.அந்த காலத்திலேயே எங்கள் தெருவில் இருந்த ஓரிரு பெரிய வீடுகளில் அதுவும் ஒன்று.மேற்கே பார்த்த வீடு.தெருவில் இருந்து நான்கு கருங்கல் படி வைத்து ஏற்றிக் கட்டிய வாசல்.உச்சி வெயில் பட்டு அந்தப் படிகள் எல்லாம் கொதித்துக் கொண்டிருந்தன.அதில் அமர்ந்திருந்த பாஸ்கரனை பார்த்தேன்.கால்கள் இரண்டும் விழுந்து போயிருந்தன.ஒரே ஒரு கை மட்டும் செயல்படும் நிலையில் இருந்தது.சட்டை ஒன்றும் அணியாமல், அவன் கால்களுக்கு கீழே ஒரே ஒரு துணி மட்டும் போர்த்தப்பட்டிருந்தது.அவன் நிர்வாணமாக கிடந்தான் என்று தான் சொல்ல வேண்டும்.அவனுடைய கடந்த காலம் லௌகீக வாழ்க்கையின் உச்சம்.குடியும் கூத்தியாளும் என அவனை கம்பீரமாகப் பார்த்திருக்கிறேன்.அவனுடைய இன்றைய இந்த நிலை மனதைப் பிசகியது.இப்படி கஷ்டப்படுவோம் என்று தெரிந்திருந்தால் அவனுடைய கடந்த காலம் வேறு மாதிரி இருந்திருக்கும்.அல்லது இப்படி தான் அவனுடைய நிகழ் காலமும் வருங்காலமும் இருக்க வேண்டும் என்பதற்காக தான் அவனுடைய கடந்த காலம் அவ்வாறு இருந்திருக்க வேண்டும்.எது எப்படியோ வாழ்க்கை ஒவ்வொரு வினாடியும் புதிராகவே இருக்கிறது.
மதிய உணவு முடித்து விட்ட பின்னும் அந்த குடைச்சல் மனதில் இருந்து கொண்டே இருந்தது.மாலை நான்கு மணிக்கு தூங்கி எழுந்த போதிலும் அந்த குழப்பம் மட்டும் அகலாமல் அப்படியே இருந்தது.மேற்கில் சூரியன் மெல்ல இறங்கிக் கொண்டிருந்தான்.வெயில் தாழ்ந்து கொண்டிருந்தது.சற்று வெளியில் சென்று நண்பர்களை சந்தித்து விட்டு வருவதற்காக கிளம்பினேன்.முதலில் மசூதி தெரு வழியாக நான் படித்த பள்ளியைத் தாண்டி எனது நண்பன் சிவா வீட்டுக்குச் சென்றேன்.பள்ளியைக் கடந்த அந்த அரை நிமிடத்தில் வாழ்க்கை இருபது வருடங்கள் சுழன்று வந்தது.ஆசிரியர்களின் முகங்கள் மனதில் வந்து விட்டு மறைந்தன.அவர்களை எல்லாம் சந்திக்க வேண்டும் எனத் தோன்றியது.அவர்கள் இப்போது எப்படி இருக்கிறார்கள் எனப் பார்க்க வேண்டும் எனத் தோன்றியது.எத்தனை நாட்கள் அவர்களைப் பார்த்து நடுங்கியிருப்பேன்?கம்பீரமாக என்னை மிரட்டிய அவர்கள் இன்று மூப்பு எய்தி இருப்பார்கள்.காலியாக கிடந்த அந்த கம்பவுண்டர் வீடு,இறந்து போயிருந்த என்னுடைய தமிழ் ஆசிரியர்,அரண்மனை போன்ற வீட்டில் இருந்து விட்டு வாழ்க்கையின் போக்கில் இன்று ஒண்டுகுடித்தனத்தில் தங்கி இருக்கும் செட்டியார் குடும்பம் என நான் பார்த்த மிக வசீகரமான கம்பீரமான மனிதர்களின் வாழ்க்கை மாற்றம் மேலும் அச்சத்தையும் வாழ்க்கை பற்றின கேள்விகளையுமே என்னுள் அதிகப்படுத்திக் கொண்டிருந்தது.நான்கு நாட்கள் கழித்து ஊருக்கு கிளம்பும் வரையிலும் பதில் இல்லாத கேள்விகளாலேயே என் மனம் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது.
நகரத்தில் அதிகாலை வந்து இறங்கியவுடன் அதன் பரபரப்பு என்னையும் தொற்றிக் கொண்டது.ஆனால் இந்த அதிகாலையில் சாலையில் ஒன்றும் அவ்வளவு போக்குவரத்து இல்லை.உடற்பயிற்சிக்காக ஓடி ண்டிருப்பவர்கள்,செய்திதாள்களைப் பிரித்துப் போட்டுக் கொண்டிருப்பவர்கள்,பால் போடுபவர்கள்,சாலையை பெருக்கிக் கொண்டிருப்பவர்கள்,தேனீர் கடைகளுக்கு வெளியில் சிகரெட் பிடித்துக் கொண்டிருப்பவர்கள் என அதிகாலையில் மரங்களின் கிளைகளுக்கு வெளியில் விழுந்து கொண்டிருந்த சோடியம் விளக்குகளின் வெளிச்சத்தில் சொற்ப மனிதர்களே இருந்தார்கள்.இருட்டில் நிறைய மனிதர்கள் இருக்கலாம்.அது எனக்குத் தெரியவில்லை.
ஆட்டோ ஒன்றைப் பிடித்து பயணப்பட்டேன்.மனிதர்களின் முகங்கள் என்னைக் கடந்து சென்றன.இந்த நகரம் மற்றொரு நாளுக்காக தயராகிக் கொண்டிருக்கிறது.இன்று,இந்த மனிதர்களின் பலரது வீட்டில் அவர்களுக்கு பிடித்தமானவர்கள் இறந்து போகலாம்.பலரது காதலி பிரிந்து போகலாம்.பலர் மேலதிகாரிகளிடம் வசை வாங்கலாம்.பலருக்கு பணம் வரவாகலாம்.ஆந்திராவிலிருந்தோ,பீஹாரிலிருந்தோ பெண்கள் இறக்குமதி செய்யப்படலாம்.பலருக்கு திருமணமாகலாம். அச்சம், மகிழ்ச்சி, துயரம், காமம், நிம்மதி, பொறாமை என ஏதேவொரு உணர்வு நான் பார்க்கும் இந்த முகங்களுக்கு பின் இருக்கிறது.ஆனால் அவர்களின் இருப்பு பற்றி அவர்கள் விசாரணை செய்வதேயில்லை.இங்கு உணர்வுகள் மட்டுமே இருக்கின்றன.காலமும்,வெளியும்,ஸ்தூல உடம்பும் இருப்பைத் தாண்டி இருக்கின்றதென தோன்றுகிறது.

Tuesday, April 17, 2012

காற்றில் மிதக்கும் சிறகு

காற்றில்
மிதந்து கொண்டிருக்கிறது சிறகொன்று

இக்காட்சியின்
அழகை கவிதையாய் பதிவு செய்திட
கவிஞன் ஒருவன் முயல்கிறான்

தலைப்பிடுகிறான்
காற்றில் மிதக்கும் சிறகென்று
எழுதி எழுதி கிழித்து எறிகிறான்

பெருமுயற்சியிலும்
அவனால் அந்த காட்சியை
அழகாக பதிவு செய்ய முடியவில்லை

வார்த்தைகளில்
அழகியல் பதிவு செய்யப்படாமல்
துன்பியலே பதிவு செய்யப்படுகிறது


பெருவெளியில்
சிறகின் தனிமையும்
பற்றிக் கொள்ள ஏதுமில்லாமல்
பதட்டமாய் காற்றின் போக்கில் அலைவதுமென
ஒரு பொருளின் துயரமே
அவனது வார்த்தைகளாய் வடிவம் பெறுகின்றன


இப்பொழுது
கவிதையை திருத்தி தலைப்பிடுகிறான்
காற்றில் அலையும் சிறகென்று

பிறகு
கவிதையை கிழித்து எறிந்து விட்டு
அவனது அறையின் இருண்ட மூலையில்
ஒளிந்து கொள்கிறான் தனிமையில்

Sunday, March 11, 2012

Apropos of the Wet Snow

When from out of error's daarkness
With a word both sure and ardent
I had drawn the fallen soul,
And you,filled with deeper torment,
Cursed the vice that had ensnared you
And so doing wrung your hands;
When,punishing with recollection
Forgetful conscience,you then told
The tale of all that went before me,
And suddenly you hid your face
In trembling hands and,filled with horror,
Filled with shame,dissolved in tears,
Indignant as you were,and shaken....
Etc.,etc.,etc.,

From the poetry of N.A.Nekrasov

Wednesday, March 7, 2012

ஒரு முன்னுரை..ஒரு குடிகாரன்...ஒரு முடிக்கப்படாத சிறுகதை


ஒரு முன்னுரை..ஒரு குடிகாரன்...ஒரு முடிக்கப்படாத சிறுகதை


முன்னுரை....

என் நண்பன் அவன் சிறுகதைக்கு முன்னுரை வழங்குவதற்காக மிகப் பெரிய எழுத்தாளனாகிய என்னை அணுகினான். நானும் விளம்பரத்துக்காக ஒத்துக் கொண்டேன். நன்றாக குடித்து விட்டு சிறுகதை எழுத ஆரம்பித்தான்.குடித்து குடித்து எழுதினான்.பாதி போதையில் மட்டையாகி படுத்து எழுதினான்.அவனுடைய குறிப்புகளை தொகுத்து கீழே வழங்கியிருக்கிறேன்.நிறைய எழுத்துப் பிழை,இலக்கணப் பிழை இருக்கும்.ஏனென்றால் இதை எழுதியவன் ஒரு குடிகாரன்.இந்த சிறுகதையில் அவன் என்ன சொல்ல வருகிறான் என்பதுவும் அதன் முடிவும் எனக்குப் புரியவும் இல்லை கிடைக்கவும் இல்லை.இதனை புரிந்து கொள்ளும் facebook,blog வாசகர்களே..தயவு செய்து அடியேனின் அறிவை விருத்தி செய்யுங்கள்.இனி குடிகாரனின் முடிக்கப்படாத சிறுகதை....

சிறுகதை...

அந்த வார இதழின் சிறுகதை பகுதியில் அந்த சிறுகதையையும் அதன் கீழ் இருந்த பெயரையும் பார்த்தவுடன் எனக்கு புரிந்து போனது.அந்த கதையை எனது நண்பன் சீனிவாச செட்டியார் தான் எழுதி இருக்க வேண்டும் என்று.கடைசி கடைசியாக தன்னுடைய ஐம்பதாவது வயதில் முதல் சிறுகதையை முடித்து,அதனை அவர் விரும்பியது போல ஒரு இலக்கியப் பத்திரிகையிலும் வெளியிட்டு விட்டார் என்று நான் முடிவு செய்து விட்டேன்.அப்படி இருக்கும் பட்சத்தில் இந்நேரம் மனிதர் தலை கால் புரியாமல் ஆடிக் கொண்டிருப்பார்.அதனால் அவரை தொந்தரவு செய்ய விரும்பாமல்,மாலை அலுவலகம் முடிந்து வரும்போது சந்தித்து அவருக்கு பிடித்தமான கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர் பாவையும் கையில் திணித்து விட்டு வாழ்த்து சொல்லி விடலாம் என்ற எண்ணத்துடன் என்னுடைய அலுவலகத்துக்கு கிளம்பி விட்டேன்.நான் அலுவலகம் முடித்து விட்டு நமது செட்டியாரை பார்க்க மாலை ஆகி விடுமாதலால், இந்த இடைவெளியல் வாசகர்களாகிய நீங்களும் நமது செட்டியாரை பற்றி தெரிந்து கொள்ள ஏதுவாக அவருடைய சரிதையை சொல்லி விடுகிறேன்.பொறுமையாக அமர்ந்து மாலை வரை பின் வருவனவற்றை படித்துக் கொண்டிருங்கள்.அப்பொழுது தான் நான் மாலையில் செட்டியாரை சந்தித்து வாழ்த்து சொல்லும் போது,உங்களுக்கும்  வாழ்த்து சொல்ல தோன்றும்.

முதலில்,நமது செட்டியாரின் வயது ஐம்பது என்பதாலும்,நான் அவருடைய நண்பன் என்பதாலும்,எனக்கும் ஐம்பது வயது என்று நீங்கள் தவறாக நினைத்து விடக் கூடாது.நான் இன்னும் வரன் தேடிக் கொண்டிருக்கும் முப்பதை தாண்டாத பையன்.பிறகு எப்படி செட்டியார் என் நண்பன்?

எப்படியாவது ஒரு சிறுகதை எழுதி தானும் ஒரு சிந்தனைவாதி ஆக அங்கீகாரம் பெற்று விட வேண்டும் என்று கொள்ளை ஆசை கொண்டிருப்பதாக அன்று நான் ரயிலில் சந்தித்தபோது செட்டியார் கூறியது இன்று இந்த சிறுகதை தலைப்பின் கீழ் அந்த பெயரைப் பார்த்த போது நினைவுக்கு வந்தது.ஏனென்றால் தன் சிறுகதை ஏதோவொரு நாளேட்டிலோ வார ஏட்டிலோ வரும் போது தான் தன்னுடைய புனைப் பெயராக "உயிர் எழுத்தாளன்" என்ற பெயருடன் அந்த சிறுகதையை வெளியிடச் சொல்வேன் என்று அந்த சந்திப்பின் போது செட்டியார் சொல்லியிருந்தார். இன்று அந்த பெயருடன் ஒரு சிறுகதை நான் கையில் வைத்திருக்கும் இலக்கியப் பத்திரிக்கையில் இருப்பதாலும்,இது போன்ற மொக்கைப் பெயர்களை சில மொக்கை மனிதர்களால் மட்டுமே யோசிக்க முடியும் என்பதாலும் இந்த சிறுகதை அவரால் தான்  எழுதப்பட்டிருக்கும்  என்று முடிவுக்கு வந்து விட்டேன்.அது என்ன "உயிர் எழுத்தாளன்" என்று நான் கேட்டதற்கு அவர் கொடுத்த விளக்கம் இருக்கிறதே.எனக்கு சொல்லத் தோன்றியதெல்லாம்,"இதை தஞ்சாவூர் கல்வெட்டுல பதிச்சு வச்சிட்டு அதுக்கு பக்கத்திலேயே நீயும் உட்கார்ந்துக்க.பின்னாடி வர்ற சந்ததியினர் இதப் படிச்சு பயன் பெறட்டும்".மனதில் மட்டுமே இதை நினைத்துக்கொண்டு வெளியில் சிரித்து வைத்தேன்.அவர் கொடுத்த விளக்கம் யாதெனின்,"அதாவது உயிர் எழுத்தாளன் என்பதற்கு அர்த்தங்கள் பல உள.பொதுவான அர்த்தமாக இரண்டு அர்த்தங்களை கொள்ளலாம்.ஒன்று எழுத்தையே உயிராக கொண்டவன்.மற்றொன்று தமிழில் உயிர் எழுத்துக்கள் உள்ளதால்,உயிர் எழுத்தாளன் என்று பெயர் கொண்டவன் தமிழை மிகவும் நேசிப்பவன்  என்றும் கொள்ளலாம்." என்று கூறி முடித்தார்.

இதோடு இந்த மனிதரின் சகவாசத்தை முறித்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தேன்.அந்த ரயில் AC கம்பார்ட்மெண்டில் வேறு யாரும் இல்லாத காரணத்தால்,நீங்கள் எப்படி உங்கள் விதியை நொந்தபடி வேறு வேலை இல்லாமல் இதைப் படித்துக் கொண்டிருக்கிறீர்களோ அதனை போலவே நானும் அவரை தவிர்க்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தேன்.அப்பொழுது தான் வந்தது இயற்கை உபாதை.அவர் சொல்ல சொல்ல கேட்காமல் முந்தைய ஸ்டேஷனில் நான் சாப்பிட்ட bread omlete குடலைப் பிடுங்கிக் கொண்டு வந்தது.மனிதனுக்கு எந்த போக்கு வந்தாலும் தாங்கிக் கொள்ளலாம்.ஆனால் இந்த வயிற்றுப் போக்கு?அதுவும் பொது இடத்தில்?இதனை விட கொடூரமான தண்டனை மனிதனுக்கு இல்லை.இது போன்ற நேரத்தில் அனுசரணையாக நடந்து கொள்ளும் எவரையும் நாம் கேலி செய்யக் கூடாது.அதற்காக அனுசரணை என்ற பெயரில் செட்டியார் எனக்கு கழுவி எல்லாம் விடவில்லை.வயிற்றுப் போக்கின் போது அனுசரணையான செய்கைகள் என்ன என்பதனை விளக்குவது இந்த சரிதைக்கு தேவை இல்லாதது என்பதனால்,அவர் என்னிடம் அனுசரணையாக நடந்து கொண்டார் என்பதோடு முடித்துக் கொள்வோம்.ஆக ரயில் போக்கில் போய்க் கொண்டிருந்த நாங்கள் என்னுடைய வயிற்றுப் போக்கினால் நண்பர்கள் ஆனோம்.இதனை தர்க்கம் செய்பவர்களும்,ஏற்றுக் கொள்ள மறுப்பவர்களும் தயவு செய்து இதனை படிப்பதை நிறுத்தி விட்டு உங்கள் வேலையை பாருங்கள்.தர்க்கம் செய்யாதவர்கள்,ஒரு வயிற்றுப் போக்கின் மூலமாக உருவான நட்பை பற்றி நம்பி மேலும் தொடர்க.

பிறகு மெல்ல இருவரும் பல உலக சமாசாரங்களைப் பேசியபடி எங்கள் பயணத்தை தொடர்ந்தோம்.அவர் ஒரு இலக்கியவாதியாக அங்கீகாரம் பெற்று விட வேண்டும் என்று தலை கீழ் கரணங்கள் போட்டுக் கொண்டிருப்பதாக வருத்தத்துடன் கூறினார்.அதில் என்ன அவ்வளவு கடினங்கள் இருக்கிறதா என்ற என்னுடைய கேள்விக்கு அவர் கூறிய பதில்..

"எல்லோருக்கும் புரிகிறபடிக்கு கதைகள் எழுதுவது சுலபம்.ஆனால் ஒரு சிலருக்கு மட்டுமே புரிவது போல் கதைகள் எழுதுவது கடினம்"

"ஆனாலும் எல்லோருக்கும் புரிவது போல் ஏன் கதைகளை நீங்கள் எழுதக் கூடாது??"

"அங்கு தான் இருக்கிறது இலக்கிய கதைகளின் சூட்சுமம்.அதாவது,எல்லோருக்கும் புரிவது போல் எழுதி விட்டால் நீ வெகுஜன எழுத்தாளன் ஆகிவிடுவாய்.முதலில் நீ இலக்கிய எழுத்தாளனாக அங்கீகாரம் பெற வேண்டுமானால் யாருக்கும் புரியாத மாதிரி எழுத வேண்டும்" என்று கூறி முடித்து விட்டு என்னை உலகம் தெரியாத அப்பாவி என்றும் எனக்கு இன்னும் இலக்கிய வளர்ச்சி வேண்டும் என்றும் சொல்லி முடித்தார்.அதோடு விட்டாரா மனிதர்.ஒரு இலக்கிய கட்டுரையின் தகுதிகளாக அவர் விளக்கினார்.நானும் பிள்ளையிடம் பாடம் படித்த அப்பனைப் போல அவரிடம் பாடம் கேட்டேன்.அவர் கூறியதாவது..


சாமி நான் மட்டை....அவரோட விளக்கத்துல இல்ல...இந்த mansion house-ல...

இனிமே இது சிறுகதை இல்ல...ஒரு தொடர்கதை :) :) :)